Tuesday, December 16, 2014

படித்ததில் பிடித்தது



தவறு-மன்னிப்பு

சந்தோஷத்தை,
சஞ்சலத்தை,
சிலிர்ப்பை
என்று ஏதோ ஒன்றை தருவதாக...

முதல் தவறு மட்டும்
அச்சத்தையும்,
முதல் மன்னிப்பு கோரல்
வெட்கத்தையும் தருவதாக...

மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,
பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,

பிறகு எல்லாம்
பழகி விடுகிறது.

செய்வதற்கு எந்த தவறும்
கேட்பதற்கு எந்த மன்னிப்பும்
குற்ற உணர்வு தருவதில்லை...

அப்புறம் பார்த்துக்கலாம்
என்கிற மனநிலை இருக்கிற வரை
தவறுகள் தொடரும்...

கடவுளே எத்தனை
பெரிய தவறுக்கும்
பாவமன்னிப்பு தரும்போது...
மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?

மன்னிப்பு கேட்கிற
எத்தனை பேருக்கு -
பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்...

ஆனாலும்
தவறு செய்யாமல்
இருக்கப்போவதில்லை...
மன்னிப்பு கோராமலும்
இருக்கப்போவதில்லை...

எல்லாமே பாவனையாக,
மன்னிப்பு கேட்டு, கேட்டு...
மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -
மன்னிப்புக்கு மரியாதை
இல்லாமல் போனது...

மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல
தவறுகள் செய்கிறோமோ...

ஒரு நொடிப் பொழுதில்
விழும் அடி,
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை...

யாரோ ஒருவரின் தவறால் -
நான் பாதிக்கப்படும் போது,
தவறின் வீச்சு புரிகிறது...

மன்னிக்க முடியாத
இயலாமையும் பிடிபடுகிறது...

----------------------------------

(இது கண்ணதாசன் கவிதை என்ற குறிப்புடன், எழுத்து.காம் என்ற  தளத்தில் படித்தேன். கவிதையின் அழகு குறைவென்றாலும், கருத்து என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணதாசன் கவிதை தானா என்று ஒரு சந்தேகம் இருந்த போதிலும், கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.....)

Monday, December 15, 2014

நட்பு

நட்பென்னும் தொடர்பதிவுக்கு என்னை நிலாமகள் அழைத்து ஆயிற்று இரண்டு மாதங்கள்...... இப்படி ஒரு சோம்பேறி என்று தெரிந்திருந்தால் பாவம் நிலா என்னை அழைத்திருக்கவே மாட்டார்.... என்ன செய்வது எல்லாம் விதி..
சரி,  முயலாக இல்லாவிட்டாலும், ஆமையாகவாவது கொஞ்ச தூரம் ஓடிப் பார்த்து விடவேண்டும் என்று முடிவெடுத்து இந்த தொடர் பதிவில் நுழைகிறேன்....
இதில் கேள்வி பதில் எல்லாம் இல்லை.
படித்தபின் தோன்றும் கேள்விகளுக்கு அவரவர்களே பதில் எழுதிக் கொள்ளலாம்.....(எப்பூடி...)

எத்தனை வயதில் நான் நட்புக்குச் சொந்தக்காரியானேன் என்று நினைவில் இல்லை. ஆனால் முகமும், பெயரும் மறந்து போன பல நட்புகள் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டு தானிருக்கிறது.