Monday, July 15, 2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம். 14/07/2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம்....

 காலையில் தொலைக்காட்சியில் கேட்ட ( பார்த்த?)  செய்தி கொஞ்சம் வருத்தப்பட வைத்தது. பழையன கழிதலும், புதியன புகுதலும் எப்போதும் உள்ளது தான் என்றாலும், சில பழையன கழிகையில் வலிக்கத் தான் செய்கிறது....

இன்றைய தலைமுறைக்கு தந்தி என்பது அவ்வளவாக பரிச்சயப் படாத ஒரு விஷயம். கடிதமும்,தந்தியும் மட்டுமே தொடர்பு சாதனங்களாக இருந்த காலத்தில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தந்தி சேவை நிறுத்தம் ஒரு சின்ன வலியையாவது தரத் தான் செய்யும்..

சினிமாவில் , ’சார்,  தந்தி’என்ற குரலும், சீருடை அணிந்த ஒருவர் ஒரு காகிதத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு ஒரு மடித்த காகிதத்தை தந்து போவதும் காட்டுவார்கள். காகிதத்தை வாங்கியவர் அதனை பிரித்துப் படிப்பார்.ஆனால் நிஜத்தில் தந்தி பிரித்த ஒரு காகிதமாகவே வரும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக்கொண்டு வரும் அந்த காகிதத்தை சீருடை அணிந்த பணியாளரும் வழங்கியதில்லை. தந்தி மேன் என்று ஒருவர் இருப்பார். அவரைப் பார்க்கும் போதே பயமாக இருக்கும்.