Wednesday, February 28, 2018

கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை

காலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன….
ஆனால்
காலத்தின் கண்களை  பனிக்க வைக்கும
விழாவாக நடக்கிறது இந்த விழா…
என் நீண்ட பணிக்காலத்தில்
எத்தனையோ
கண்காணிப்பாளர்கள்…
நீங்கள் மட்டும் தான்
அன்பின் பெருமரமாய்
ஆதூர விழுதுகளுடன்
மனதில் வேர்பிடித்தவர்…..
சினம் என்ற சேர்ந்தாரைக்கொல்லியை
அருகில் சேர்க்காத உங்கள்
சிறந்த பாடம்
எல்லோரும் படிக்க வேண்டியது….
அனைவரின் தேவைகளையும்
உணர்ந்தபடி
அலுவலக வசதிகள் இல்லாத சூழலிலும்
அன்றாடம் உழைத்தது உங்கள்
கடமைக்கு கட்டியம் கூறும் எங்கள் மனதில் என்றும்…..
ஓய்வறியாத உங்கள் வாழ்வில்
எல்லா வளங்களும், நிறைவான மகிழ்வும்
எப்போதும் நிறைந்திருக்கட்டும்…
எப்போதும் புன்னகை நிறைந்த
உங்கள் பொன்முகம்
பொலிவோடிருக்கட்டும்….
எங்கள் வாழ்வின் எல்லா காலங்களிலும்
உடனிருந்து வாழ்த்த உங்கள்
கரங்கள் எங்களிடம் தொடர்பிலிருக்கட்டும்ம….
மகிழ்வாய், நிறைவாய்
நீடு வாழ வாழ்த்துகிறேன்
என் அன்புக்குரிய கண்காணிப்பாளரே...
மருத்துவர் மணிமாறன் சார் பிரிவுபச்சார விழாவில் வாசித்த கவிதை

அடைமழைக் காலத்தில்
இடை வந்த சூரியன் போல
இந்த
அரசு மருத்துவமனைக்கு
அபயம் அளிக்க வந்தவர் நீங்கள்…
உங்கள் அன்பெனும் மந்திரத்தால்
அழகாய் பூத்தது இந்த
மருத்துவமனை
ஒரு சோலையைப் போல…
அதிகாரத்தின் எல்லைகளை
புன்சிரிப்பென்னும்
வண்ணப்பொடியால்
வரையத் தெரிந்த உங்கள் முன்
எப்போதும் மறைந்து போகும்
அகங்கார வெள்ளைப்புள்ளிகள்….
மனிதர்களிடம் மனிதத்தை மட்டுமே
தேட யத்தனிக்கும்
மகத்துவமான மனம் உங்களுக்கு
அதனால் தான்
மாதங்களில் தான் பழகினோம் என்றாலும்
மனது வலிக்கிறது உங்கள் பிரிவில்…
வலியோடு வருகிற
ஒவ்வொருவரையும்
கருணையோடு அணுகத் தெரிந்த
உங்களுக்கு
கடுமை ஒருபோதும்
கைவரப் பெற்றதில்லை…
குறைகளைக் கூறியபடி
தொடர்ந்து வந்த குழுக்களைக்கூட
இயல்பான உண்மைகளை
இன்முகத்துடன் கூறி
இணக்கத்துக்குரியவர்களாய்
மாற்றியது
உங்கள அன்பதிகாரத்திற்கு
அழியா சாட்சி……
மருத்துவரய் மட்டுமல்ல
எங்களுக்கு இனிய
நண்பராகவும் மனதில்
நிலைத்தவர் நீங்கள்…..
செல்லும் வழியெல்லாம்
அன்பை விதைத்துச் செல்லும் உங்கள் இன்முகம்….
எங்கள் பிரியத்துக்குரிய மருத்துவரே…..
வாழ்வின் பெருவீதியில்
நீங்கள் விரும்பியதெல்லாம்
கிடைக்கட்டும்….
வளமும் மகிழ்வும் நிறைவுமாய்
வசப்படட்டும் வாழ்வு…..
மனமார்ந்து நெகிழ்வாய் வாழ்த்துகிறேன்…
வாழ்த்துக்கள் சார்…

ஹேமலதா,
மருந்தாளுநர்,
அரசு மருத்துவமனை,
பூதலூர்….
பூதலூர் அரசு மருத்துவமனையின் இரண்டு நிகழ்வுகள் மனதை நெகிழ்வும், பெருமிதமும் கொள்ளச் செய்வது....
ஒன்று எங்கள் அன்புக்குரிய மரு.மணிமாறன் அவர்களின்  பிரிவுபச்சார விழா
மற்றது
எங்கள் அலுவலக கண்காணிப்பாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களது பணி ஓய்வு பாராட்டு விழா...
உணர்ச்சிகளின்  குவியலாய் இருந்த இவ்விரு நிகழ்வுகளும், இந்த வருடத்தின் முக்கியமான மறக்க இயலாத நிகழ்வுகள்... அலுவலகம் சார்ந்து   எத்தனையோ நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய அனுபவம் இருந்த போதிலும், இந்த   இரண்டு விழாக்களும் புதிய அனுபவங்களைத் தந்தவை.. மனதுக்கு மிக நெருக்கமான இருவரது அலுவலக ரீதியிலான பிரிவு கூட எத்தனை வருத்தத்தைத் தந்துவிடுகிறது....
சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்றென்றும் மறக்கவியலாத பதிவுகளாய் மனதில் நிலைப்பவை....