நீயும், உன்னில் அவளும்.
தீண்டலும்,
தீண்டாமையும் இல்லாத
தூயவள் என்று
உன்னைச் சொல்லிக் கொள்கிறாய்..
நாற்பது வயதிலேயே
பேரன் பேத்திகளுடன்
கொஞ்சி குலாவுவதை
பெருமையாய் பேசுகிறாய்.....
துணைவி ஒருத்தியின்
கதகதப்பில் இருந்தபடி
உன்னை
அடித்து துவைத்து
அலட்சியப்படுத்தும் கணவனை
மாமியார் என்ற பெயரின்
கௌரவம் காக்க
சகித்துப் போகிறாய்.....
இப்படி
சிரித்து சிரித்து
உன் சகிப்பை
நீ சொல்லும் நேரங்களில்
எனக்குத் தெரிகிறாள்...
உன்னுள் இருக்கும் பெண்ணொருத்தி.
பதினாறு வயதிலேயே
சமூகம் போட்ட
தாலி என்ற கைவிலங்கை
அவிழ்க்க முடியாத
கையறு நிலையில் கண்ணீர் உகுத்தபடி....
கிருஷ்ணப்ரியா, தஞ்சாவூர்.....