Showing posts with label சுயம். Show all posts
Showing posts with label சுயம். Show all posts

Sunday, May 10, 2015

என் சுயம்

உனக்குப் பிடித்தமான
வண்ணக் கலவைகள் கொண்டு
என்னை வரைய முற்படுகிறாய்....
எனக்கான வண்ணங்களில்
உன் தூரிகை நனைந்து விடாதிருக்க
மிகுந்த பிரயத்தனம் செய்கிறாய் ...
புராதனச் சுவரில்
அறையப்பட்டு இருக்கும்
சட்டகத்துக்குள்
என் ஓவியத்தை திணித்துவிடும் யத்தனிப்பில்
விரயமாகிக் கொண்டிருக்கிறது
உன்னிடமிருக்கும் நமக்கான நேரம்.  ..
அந்த கால இடைவெளியில்
வில்லினின்று பறக்கும் அம்பாக
சிறகு விரித்து சிட்டெனப் பறக்கிறது என் சுயம்....



நன்றி:  வறண்ட ஒரு மதிய பொழுதை கவிதையாக்கும் பொழுதாக மாற்ற முடிந்த அமிர்தம் சூர்யாவுக்கும்,
அக்கறையுடன் தவறுகளைத் திருத்தும் பாரதிக்குமாருக்கும்....
பிரசுரித்த கல்கிக்கும்