Showing posts with label தேவதைகள். Show all posts
Showing posts with label தேவதைகள். Show all posts

Thursday, May 11, 2017

செவிலியர் தின வாழ்த்துக்கள்....

நாளை.. 12/5/2017 செவிலியர் தினம். அதையொட்டி எழுதிய கவிதை... ஒரு நாள் முன்னதாகவே நான் பணிபுரியும் அரசு மருத்துவமனை, பூதலூரில் செவிலியர் தினம் கொண்டாடினோம். அதில் படிப்பதற்கு எழுதியது.  எனக்கு நிறைவைத் தந்த கவிதை... பல நாட்களுக்குப் பின் வலைப்பக்கம் வர வைத்திருக்கும் கவிதையும் கூட....
------------------------------------------------------


ஒரேயொரு ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவில் தொடரும்
இந்த செவிலியர் தினம்
உருவாக்கிக் கொண்டே இருக்கிறது
கோடானுகோடி ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்களை....
இந்த வெள்ளையுடுப்புக் காரிகைகளால் வளர்வது மனிதர்களின் ஆரோக்கியம் மட்டுமல்ல
உலகமெங்கும் பரிவும், கனிவும் கூடத்தான்....
அவர்களது நிற்காமல் ஓடும் கால்களின் சக்கரங்களால் தான்
மரித்துவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்....
வெள்ளை .....
தேவதைகளின் உடையானது
நீங்கள் அணியத் துவங்கிய பின் தானோ!!!!
நோய்மையில்  தவிக்கும்
ஒவ்வொரு உயிரும் உங்கள் கரங்களில் ஒரு பூவென மலர்கிறது...
வாதையிலிருந்து விடுதலை பெறும் அவர்களது வாழ்வில்
நிரந்தரமான மகிழ்வாய்
உங்கள் முகம் பதிந்து போகிறது....
உங்களது சேவைகள் இல்லாது போனால்
மருத்துவம் என்ற சொல்லுக்கே மகத்துவம் இல்லாது போகும்...
வாழ்வின் வழி நெடுக
தொடர்ந்து கொண்டேயிருக்கும்
கருணையின் நதி ...
காலனின் கோரச்சூட்டிலிருந்து
தடுத்துக் காக்கும் நிழல்தரு...
அன்பின் பெயரால் அழைக்கப்படும்
ஒற்றை வார்த்தை...
அளவற்ற தாய்மையின் ஒரே அளவீடு..
அங்கிங்கெனாதபடி
எங்கும் வியாபித்திருக்கும்
கடவுளின் மாற்றுரு...
துயரெனும் வெம்மை தணிக்கும்
பெருமழை.....
...........
எப்போதும் எங்கள் மனங்களில்
குடியிருக்கும்
அன்பான செவிலியர்களுக்கு
இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்
......


2001 ல்முதல் முதலாக நான் பார்த்த செவிலியர்கள் சாந்தி , சரஸ்வதி, மோகனா முதல் இங்கிருந்து மாறுதலில் சென்றுவிட்ட மஞ்சு, உமா,  சூர்யா,சாந்தி, ஜெனிட்டா,ஜெனிஃபர்,  சங்கீதா, சுகன்யா உள்ளிட்ட அனைத்து அன்பு பிள்ளைகளுக்கும் இதை டெடிடேட் செய்கிறேன்