Tuesday, May 31, 2011

தெளிவாயிட்டேன்

தஞ்சை நகரத்திலிருந்து சுமாராக ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில்
 இருக்கும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனக்கு மருந்தாளுநராக
 பணி. மருந்தாளுனர் என்றால் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவது
 முதன்மையான பணி..... துணை நிலை பணி என்ன என்று கேட்டு விடக்
 கூடாது, அது ஒரு பெரிய பட்டியல்.


சரி அதை விடுங்கள்.... நான் சொல்ல வந்த சேதியே வேறு.....


மருத்துவமனையில் அன்று நல்ல கூட்டம். வாரத்தில் ஒரு நாள் மட்டும்
 இரத்தக் கொதிப்பு, நீரிழிவு  நோய்க்கு என்று சிறப்பு மருத்துவமும்,
மருந்துகளும் வழங்கப் படும். அதை வாங்குவதற்காக
 வருகின்ற மக்கள்  கூட்டம். அன்று மட்டும் சுமாராக நானூறு பேராவது
 வருவார்கள். நான்  (மட்டும் தான்)பர பரப்பாக மருந்துகளை வழங்கிக்
 கொண்டிருந்தேன்.  படிப்பறிவில்லாத வயதானவர்களே அதிகம் அந்த
 கூட்டத்தில். இது இரத்தக் கொதிப்புக்கான மாத்திரை, இது சர்க்கரைக்கு,
 இது சத்து மாத்திரை என்று சொல்லியபடியே கொடுத்துக்
கொண்டிருந்தேன். இடையில் மருத்துவர் அழைப்பதாக செய்தி வந்தது.
 கூட்டத்தை நிற்க வைத்துவிட்டு அங்கே போனேன்.

"அம்மா, நீங்க இந்த பேஷண்ட்ஸ் கிட்டே,  சக்கரை வியாதி, இரத்தக்
 கொதிப்புன்னெல்லாம் சொல்லாதீங்க, இங்கே பாருங்க அவங்களுக்கு
 புதுசா ஒரு வியாதி வந்துட்டதா நினச்சு என்கிட்டே வந்து கேள்வி
 கேக்கறாங்க, பிரஷர், சுகர்  அப்படின்னே சொல்லுங்க. அப்போ தான்
 அவங்களுக்கு புரியும்"  மிகவும் தீவிரமான முகத்தோடு சொன்னார்
 மருத்துவர். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சரி
 என்று சொல்லிவிட்டு வந்து என் பணியை தொடர்ந்தேன். "இது பிரஷர்
 மாத்திரை, இது சத்து மாத்திரை, இது வலிக்கு" என்று சொல்லி கொடுத்த
 என்னிடம் அந்த தாத்தா கேட்டார், "எப்போ சாப்பிடனும்மா? " " இந்த
 மாத்திரை காலையில சாப்பிடுங்க, . இது ராத்திரிக்கு சாப்பிடுங்க "
கண்களை இடுக்கியபடி அவர் மறுபடி  கேட்டார்,  "இது பகல்ல, இது நைட்டுக்கு , அப்படி தானே?"

எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை..... அடுத்து
 வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாக கூற ஆரம்பித்தேன்,
 இந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல"


நான் தெளிவாயிட்டேன்..... அப்போ நீங்க....?

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அவ‌ர்க‌ளுக்கு புரியும்ப‌டி எளிமையாக‌ பேச‌ நீங்க‌ நினைக்க‌, உங்க‌ளுக்கு புரிய‌ வெச்சிட்டாங்க‌ எப்ப‌டிப் பேசினா புரிஞ்சுகுவாங்க‌ன்னு...! க‌ல‌ப்ப‌ட‌ம் பேச்சிலும்!

    ReplyDelete
  3. வயதானவர்களும், படிப்பரிவில்லாதவர்களும் , தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் தெரியாமலே காலத்தைக் கழிக்கின்றனர். படித்தவர்களோ, தமிழ் வேண்டாம் ஆங்கிலம் போதும் என்று கணவன்-மனைவிக்கு இடையிலும், பெற்ற பிள்ளைகளிடத்தும் தாய்மொழி மறந்து ஆங்கிலத்திலேயே உரையாடுகின்றனர். இனி தமிழின் நிலை என்ன? இங்கு நான் இருக்கும் வெளிநாட்டில் தமிழ்சங்கம் உண்டு. குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் போதிக்கிறனர். இது ஒரு சமுதாய சேவை இல்லை; ஒரு தமிழ் சேவை. ஆனால் தமிழின் நிலை தமிழ்நாட்டிலோ?

    ReplyDelete
  4. அன்புள்ள திருமதி கிருஷ்ணப்ரியா,
    உங்களது இந்த பதிவை இன்றைய வலைசரத்தில் பரிந்து கொண்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

    வருகை தருக!

    நன்றி

    ReplyDelete
  5. தெளிவாக்கிய பகிர்வு...

    ReplyDelete
  6. Nice to read a blog from a medical related professional. There are very few posts from people like you madam, who can share their experiences and make general public aware of your joys and problems.

    மெடிகல் என்றாலே டாக்டர்கள் பற்றிதான் நிறைய படிக்கிறோமே தவிர,அதை சார்ந்த பதிவுகளை படிக்க அதிக வாய்ப்புகள் இல்லை. ரன்ஜனி அம்மாவுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிவு அருமையாக உள்ளது. இன்னும் உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. i could understand being pharma professional in this situation

    ReplyDelete