Wednesday, February 16, 2011

கம்பரைத் தேடி.........

வெகு நாட்களாக ஒரு ஆசை என் செல்ல மகனுக்கு.. தொலைக்காட்சியில் வருகிற குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாறுவேடமணிந்து கலக்க ஆசை.. எப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போதெல்லாம்
 என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவான்.... எனக்கோ என் தலையில் தான் எங்கள் அலுவலகமே நிற்பதாக ஒரு பிரமை ... அவன் வேண்டுகோளை காதுகள் வழியாக தலைக்குள்  கொண்டு வரவே முடியாதபடிக்கு அங்கே ஒரே இட நெருக்கடி.....


அந்த நிகழ்ச்சிக்கோ கலந்து கொள்ளும் பிள்ளைகளின் வயது ஐந்துக்குள்  இருக்க வேண்டும்... என் மகன் ஐந்து வயதை நெருங்கிக் கொண்டிருந்தான்...இப்படியான ஒரு 
சுப யோக சுப தினத்தில் கை கூப்பி என் மகன் வேண்டிக்கொண்ட எல்லா தெய்வங்களின் கூட்டு முயற்சியில்  எனக்கு ஒரு விபத்து... இரு சக்கர வாகனத்தில் போகும் போது எதிரே ஒரு திடகாத்திரமான அம்மா வந்து "கடமையே கண்ணாய் " என் வண்டியில் மோத, ரோடு கூடி வேடிக்கைப் பார்க்க வண்டியோடு தேய்த்துக் கொண்டு ரோடிலேயே ஒரு அங்கப் பிரதட்சணம்.... தலையில் சுமந்து கொண்டிருந்த அலுவலகத்தை கஷ்டப் பட்டு இறக்கி வைத்து ஒரு மாத மருத்துவ விடுப்பில் கட்டில் வாசம். மகனுக்கு அடித்தது யோகம்.. வாரந்தவறாமல் "அம்மா, பாருங்கம்மா, இந்த நிகழ்ச்சிக்கு என்னை அனுப்புங்கம்மா "  என்று என்னை பாடாய் படுத்தி வைத்தான்...
ஒருவழியாக முகவரி குறித்து வைத்துக் கொண்டு விண்ணப்பமும் தயார் ஆகி விட்டது.... திருவள்ளுவர் வேடம் சுலபம் , மகனுக்கு ஏற்கனவே பத்து திருக்குறள் மனப்பாடம் என்பதால் மீண்டும் படிப்பிக்கும் வேலை இல்லை என்று முடிவு எடுத்து அதையே விண்ணப்பத்திலும் எழுதி புகைப்படம் இணைத்து அப்படியே அனுப்பியிருக்க வேண்டாமா..? என் நேரம் என்னை அப்படி செய்ய விடவில்லை... அப்படி செய்திருந்தால் இந்த கட்டுரைக்கே வேலை இல்லாமல் போயிருக்குமே...


என் செல்லம் பள்ளியிலிருந்து  வந்ததும், "பாருடா கண்ணு, நீ கேட்ட மாதிரி உனக்கு அம்மா விண்ணப்பம் அனுப்பறேன்.. திருவள்ளுவர் வேஷம் போடப் போறேடா  செல்லம்.." என்று காட்டுவேனா.... "அய்யே என்னம்மா, நான் திருவள்ளுவர் வேஷமெல்லாம் போட மாட்டேன். கம்பர் வேஷம் தான் போடுவேன் " என்று அடம் பிடிக்கத் துவங்கினான்... என்ன ஏது என்று விசாரித்தால், அன்று தான் அவன் வகுப்பில் "கம்பன் , இளங்கோ, வள்ளுவன்" என்று ஆரம்பிக்கும் பாடலை சொல்லித் தந்திருக்கிறார்கள்... எதிலும் முதலாய் நிற்கும் என் புத்திரன் இதிலும் 'முதலாவதை'ப் பிடித்துவிட்டான்... சரிடா போடலாம் என்றாலும் விடவில்லை.." எங்கே காட்டு 'க' எங்கே, 'ம்' எங்கே " என்று தேட ஆரம்பித்துவிட்டது என் அறிவுக் கொழுந்து...  சரி போ என்று "அல்லது கம்பர்" என்று சேர்த்து விண்ணப்பத்தை அனுப்பி விட்டேன், கம்பர் என்னை பிடித்து வாட்டப் போவதை அறியாமல்....


பத்தே நாளில் அந்த தொலைக்காட்சி நிலையம் என்னை செல்பேசியில் கூப்பிட்டு 'உங்கள் மகனை இந்த தேதியில் படப்பிடிப்புக்கு   கூட்டி வாருங்கள்' என்றது... ஆகா என்று நான் நினைக்கும் போதே கம்பர் வேஷம் தானே என்றார்கள்.. நான் உடனே சமர்த்தாக ' இல்லை , திருவள்ளுவர்' என்றேன்... 'இல்லை மேடம், கம்பர் என்று வித்தியாசமா இருந்ததால் தான் உடனே உங்களை அழைக்கிறோம். கம்பர் வேஷத்தில் தான் நீங்க வரணும். விதிமுறைகளை கடிதம் மூலம் தெரிஞ்சுக்கோங்க ' என்று கூறி தொடர்பைத் துண்டித்தார்கள்.... 


கம்பர் எப்படியிருப்பார்...? எந்த ஐடியாவும் இல்லை எனக்கு...  ஒவ்வொருவராய் கேட்க ஆரம்பித்தேன்... கேட்க ஆரம்பித்தது தான் தாமதம், ஆளுக்கு ஒரு கம்பரை வடிக்க ஆரம்பித்தார்கள்... தினசரி கம்பர் விசாரணை நடக்க தொடங்கியது.. "நரைத்த தாடி மீசையுடன் வயதான வெள்ளை உடை உடுத்தியவர், இல்லை காவி உடுத்திய வைணவர், அதெல்லாம் இல்லை, நிறைய பட்டை போட்டு வெள்ளையாய் துறவி மாதிரி, அம்பிகாபதி சினிமா சி டி கிடைச்சா வாங்கிப் போட்டுப் பாரு, மதுரையிலே கம்பர் கோட்டம்  இருக்கு, அங்கே போன யாரையாவது கேளு, தமிழ் புலவர்களைப் போய் கேளு"ன்னு  பல விதமான அறிவுரைகள்....
இது இப்படியே நீள, தலையில் கொண்டைப் போட்ட, தலை முடி நீளமாக வைத்த, காவி உடுத்திய ,  வெள்ளாடை உடுத்திய, காதில் கடுக்கன் போட்ட, பட்டை போட்ட,நாமம் போட்ட -- இப்படி பலதரப் பட்ட கம்பர்கள் கனவிலே வந்து 'நானே கம்பர்' என்று சத்தியம் செய்தார்கள்.... என் அன்பு கணவரோ, ' யாருக்கும் சரியாத் தெரியல, நீ காட்டறவர் தான் கம்பர், உனக்கு தெரிஞ்ச மாதிரி மேக்கப் போட்டு, நான் தான் கம்பர்ன்னு அவனுக்கு வசனம் சொல்லிக் கொடு'ன்னு சூப்பர் டுப்பர் ஐடியா கொடுத்தார்...

 

இதெல்லாம் சரியா வராதென்று, என் மகனின் தமிழாசிரியரைப் போய் பார்த்தேன். 'அவர் உருவ அமைப்புக்கு சான்றாதாரம் ஏதும் இல்லையே, சமயக் குறிகள் ஏதுமில்லாத, கொஞ்சம் அதிகமாய் முடி வளர்த்த ஒரு புலவர் போல வேடமிடுங்களேன்' திக்குத் தெரியாதக் காட்டில் திசை கிடைத்த மாதிரி ஒரு நம்பிக்கை வந்தது.
 என் மூத்த மகன் சொன்னான், 'ஏம்மா, உங்க இலக்கிய நண்பர் இருக்காரே, சுகன், அவரைப்  போய் கேளுங்களேன்' என்று... அடடா, சரியாய்ச் சொன்னானே என்று உடனே சுகனுக்கு தொலை பேசினேன்...எப்போதுமே என் சந்தேகங்களுக்கு அழகாய் விளக்கம் தரும் சுகன் கம்பர் பற்றிக் கேட்டதும் சந்தோஷப் பட்டார்...( ' ஆகா இவள் கூட அறிவாளிகளைப் பற்றிக் கேட்கிறாளே' என்று நினைத்திருப்பாரோ என்னமோ... )


வெள்ளையோ காவியோ அவர் அடையாளம் இல்லை. அவர் அரசவைக் கவிஞராய் இருந்தவர்.கர்வமுள்ளதமிழ்ப்புலவர்.கல்வியின்  செருக்குள்ளவ்ர்.'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று கூறி மன்னரையே எதிர்த்தவர். கொஞ்சம் ஆபரணங்களோடு, பட்டாடை அணிந்த தலை நரைக்காத சமயகுறிகள் இல்லாத கம்பீரமானவர் கம்பர் ', என்று லயிப்போடு சொன்னார் சுகன்... இந்த லட்டு போன்ற வர்ணனைகளோடு எனது எம்.பில் கைடு திரு.பன்னீர்செல்வம் (கரந்தை தமிழ்ச் சங்கம்) அவர்களைப்  போய் பார்த்தேன். 'மிகவும் சரி' என்று ஒத்துக் கொண்டவர், கம்ப ராமாயணத்தில் இருந்து ஒரு சுலபமான  செய்யுளையும் எடுத்துத் தந்தார்... வேஷம் போட்ட மாதிரி பேச வேண்டுமே....


மீதமிருந்த நாட்களில் அந்த செய்யுளை விடாமல் சொல்லிக் கொடுக்க ' என்னம்மா, மிஸ் கூட டென் டைம்ஸ் தான் சொல்ல சொல்வாங்க, நீ எப்பப் பாத்தாலும் இதையே சொல்ல சொல்றே' என்று அலுத்துக் கொண்டது குழந்தை...

ஒரு வழியாக படபிடிப்பு அன்று காலை திக்காமல் திணறாமல் செய்யுளைச் சொன்னான். வாடகைக்கு வாங்கிய மிட்டாய் வண்ண பட்டு பஞ்சகச்சம் , ஜரிகை அங்கவஸ்திரம், காதில் கடுக்கன், கழுத்தில் முத்து மாலைகள், பல வருடங்களுக்கு முன் எழுதிய என் ஓலைச்சுவடி ஜாதகம் கைகளில் , கழுத்து வரை நீண்ட தலை முடி, முறுக்கு மீசை, நெற்றியில் பெரிய பொட்டு சகிதம் கனஜோராக எங்கள் வீட்டு கம்பர் தயாராகி விட்டார்.


படப்பிடிப்புக்கு வந்திருந்த பாரதமாதா, பாரதியார், அவ்வையார், நேருமாமா போன்றோருடைய பெற்றோர் எல்லாம், 'கம்பரா, பாத்ததே இல்லையே, வித்தியாசமா இருக்கே' என்றபோது, அப்பாடா என்றிருந்தது... படப்பிடிப்பு அரங்கினுள் நாங்கள் அனுமதிக்கப் படவில்லை.. உள்ளே போய்விட்டு வந்த குட்டி 'எல்லாம் சரியாய்ச் சொன்னேம்மா' என்று குஷியாய்ச் சொன்னாலும், எப்படிச்  சொன்னானோ என்றிருந்தது...


ஒளிபரப்பும் தேதி குறித்து தந்தார்கள்... உலகில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லோருக்கும் போன் போட்டுச் சொல்லி, தொலைகாட்சி முன்னால் உட்கார்ந்தால், நிகழ்ச்சி பெயர் போட்டதும் என் பிள்ளை முகம் தான் முதலில் வந்தது... பட்ட கஷ்டமெல்லாம், செய்த செலவெல்லாம், மறந்து போனது...
"முதலில் கம்பர் வாங்க" என்று தொகுப்பாளர் அழைக்க, குடுகுடுவென்று நடந்து வந்தது என் குட்டி கம்பர்.. 'வித்தியாசமா இருக்கே,கம்பர்... யார் போட்டு விட்டாங்க'  'அம்மா'... 'ரொம்ப நல்லா இருக்கு.. எங்கே எழுந்து நில்லுங்க, கம்பர எல்லோரும் பாக்கட்டும்' என்றதும், கையில் சுவடியோடு கம்பீரமாக எழுந்து நின்றார் என் அருமை கம்பர்.... "என்ன சொல்லப் போறீங்க",  "ராமாயணம் சொல்லப் போறேன்" தொகுப்பாளர் சிரித்தார்... 'எங்கே சொல்லுங்க' என்றதும், "வன்மையில்லை ஓர்" என்று தொடங்கி கட கடவென ஒப்பித்தான்..
அவனை அப்படி அருமையாய்ப் பார்த்த தருணம் கம்பருக்காக மெனக்கெட்ட எல்லாம் மறந்து போய் 'ஆகா, கம்பரை எல்லோரையும் நினைக்க வைத்து விட்டோமே ' என்ற பெருமை, மகன் மனம் நினைத்தபடி மாறுவேடத்தில் உலகெல்லாம் உலா வர வைத்து விட்ட பெருமை , சந்தோசம் எல்லாம் சேர்ந்து பெற்ற வயிறு பரவசமடைந்ததே....அதைச் சொல்ல வார்த்தையே இல்லை.... அனுபவித்தால் மட்டுமே புரியும் சுகம் அது....!





நன்றி: தினமலர் பெண்கள் மலர்

25 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மிகவும் பிடித்திருந்தது.மனதுக்கு சந்தோஷமான சில நிகழ்வுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதே ஒரு தனி இன்பம் தான்.அதை நீ தற்போது உள்ள தொழில் நுட்ப உதவியுடன் செய்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. புஷ்பலதா ....

    உன் விமர்சனம் மிக அருமை... நீ சொல்கிற மாதிரி எல்லா தொழில் நுட்பங்களையும் உபயோகபடுத்தி நம் திறமைகளை கூர்தீட்டிக் கொள்ள வேண்டியது தான்...

    ReplyDelete
  4. மனதுக்கு நிறைவாக இருக்கிறது இந்தப் பதிவைப் படிக்கையில். கம்பர் பற்றி திரு சுகன் சொன்ன வரிகள் அருமை. அதுதான் கம்பன். உங்கள் மகனிடம் இளமை தாண்டிய கம்பனைக் கண்டேன். ஆங்கிலமோகம் இன்னும் விரிந்துகொண்டிருக்கிற தளத்தில் கம்பனை வேடமிடச் சொன்ன உங்கள் மகனுக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியனின் வணக்கங்கள். வாழ்த்துக்கள் ப்ரியா.

    ReplyDelete
  5. நல்ல அனுபவங்கள் நம் உயிரோடு ஒட்டிக் கொள்ளும். எத்தனை முறை நினைத்துப் பார்த்தாலும் அலுக்காமல் இருக்கிற அனுபவங்கள் எவையோ அவைதான் சாகா வரம் பெற்ற அனுபவங்கள். தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் கம்பன் என்றைக்கும் தனித்து நிற்கக் கூடிய அலாதியான ஆளுமை. பாரதியின் பாடலைப் பாடத்திட்டத்தில் வைத்தவர்களுக்கு பாராட்டைச் சொல்ல வேண்டும். தரப்படுத்துதலில் கம்பனை முதலில் வைத்த பாரதியின் காதல் கொப்பளிக்கும் கவிமனத்தை மெச்ச வேண்டும். எதிலும் முதலாவதை நேசிக்கும் உங்கள் குழந்தையின் உயர் உள்ளத்தை உச்சி முகர வேண்டும். குழந்தை சொன்ன சொல்லுக்காக நீங்கள் நடத்திய பயணமும் அது தந்த மணமும் இன்றைக்கு வலைப்பூவில் வழிவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. இலக்கியம் செழித்துக் கிடக்கும் உங்கள் மனதை மனசார பாராட்ட வேண்டும். இதயம் வரை நனைக்கும் இதமான பதிவு. இதுப் போன்ற அனுபவங்களை பதிவு செய்யுங்கள் தொடர்ந்து. - சுகன்.

    ReplyDelete
  6. உங்கள் வருகைக்கும், அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஹரணி அய்யா.. அதிகம் தெரியவில்லை என்றாலும், தெரிந்ததை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும், முடிந்த வரை அவர்கள் ஆசைகளை சீராக்கி நிறைவேற்றிக் கொடுப்பதும் என் கடமை என்று நினைத்ததால் என்னால் இதற்கு கொஞ்சம் மெனக்கட முடிந்ததது.. இந்த வேடமிடலைத் தொடர்ந்து வெகு நாட்கள் வீட்டில் கம்பர் பற்றியே பேசிக் கொண்டிருந்ததும் இனிய தருணங்கள்... என் மகனின் அடுத்த ஆசை, வில் விஜயன் வேடம். இன்னும் எனக்குத் தான் நேரம் கிடைக்க வில்லை....

    ReplyDelete
  7. தொலைபேசி வழியில் , நேரில் என்று நாம் இதை பற்றி பேசி இருந்தாலும் , நிகழ்ச்சியை நானும் பார்த்து அப்போது பாராட்டினாலும் , தற்போதைய தங்களது படைப்பும் அதை சொல்லியு பாங்கும் மிக நேர்த்தியாக உள்ளது. உண்மை அனுபவம் உன்னதமானது நினைக்குந்தோறும்......

    ReplyDelete
  8. சுகன், மிகவும் நன்றி.... அனுபவங்களை எழுதச் சொல்லி என்னை இன்னும் இன்னும் மெருகேற்றிக் கொண்டிருப்பது நீங்கள் தான் சுகன், நான் நன்றாக எழுதுவதாக யாராவது சொன்னால் மனதில் நீங்கள் தான் நிற்கிறீர்கள். உங்கள் லயிப்பும், ரசனையுமான வரிகளுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள் பல. "நல்ல அனுபவங்கள் உயிரோடு ஒட்டிக் கொள்ளும்"... உண்மை தான். என் உயிரோடு ஒட்டியிருக்கும் பலவற்றை எழுத முயல்கிறேன்..., தொடர்ந்து...

    ReplyDelete
  9. நன்றி மணிச்சுடர்... உங்கள் பாராட்டு இன்னும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை தருகிறது...

    ReplyDelete
  10. ரொம்ப சந்தோஷம்.ரொம்ப சந்தோஷம். என்கிட்ட கேட்டு இருக்கலாம் கம்பர் எங்க பொன்னையா ராமஜெயத்துலதான் கொஞ்ச நாள் லெக்சரரா இருந்ததா குறிப்புகள் இருக்கு :-) சரி விடுங்க. இனிமே இது மாதிரி சீரியஸ் மேட்டர்லாம் சுகன் சார் கிட்ட கேக்காதீங்க.எனக்கு ஒரு மெயில் தாட்டி வுடுங்க. நான் குடுக்குறேன் 100 ஐடியா. விசய்,அசித்னு ஒரு நல்ல வேசங்கட்டாம கம்பர்,வள்ளுவர்னு :(

    ReplyDelete
  11. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் .. தாய் நீங்கள்.
    எனக்கு என் பிள்ளை போட்ட பாரதி வேடம் நினைவுக்கு வருகிறது.
    பகிர்வுக்கு நன்றி.
    குழந்தைக்கு இன்னுரு முறை திருஷ்டி சுத்திப் போடுங்கோ.

    ReplyDelete
  12. தங்களது கட்டுரை மிகவும் அருமை. எனது தம்பி தன் மழலை மொழியில் உரைத்த அந்த செய்யுள் இன்னும் பசுமையாக உள்ளது என் நினைவில். ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  13. மகிழ்ச்சி . பாராட்டு . ஒரு தாயின் பெருமிதம். எனது நண்பர் தனது மகனின் இளமைகால வெளிபாடுகளை 'அன்புள்ள அப்பா' என்ற சிறு நூலாக பதிப்பித்தார் . ( முன்னாள் தமிழ்பல்கலைகழக பேராசிரியர், இந்நாள் அலிகார் பல்கலைகழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் து.மூர்த்தி ) நாளை, மகன் இந்தப் பதிவைக் கண்டு மகிழக்கூடும், நான் இப்போது மகிழ்கிறேன்.

    --
    With Kind Regards
    Thanking you
    Rtn kuppu.veeramani.
    Dist. Chair/Rcc
    mob:9443260276

    ReplyDelete
  14. நல்ல பதிவு பிரியா .. தொகுப்பாளார் சொல்வதற்கு முன் கம்பர் வேடம் போடவேண்டும் என்று உங்கள் மகன் சொன்ன போதே கம்பரை எழ வைத்துவிட்டான் . அடுத்ததாக வில் விஜயன் என்று அவன் சொன்னதாக நீங்கள் எழுதியிருந்ததை படித்த போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. வித்யாசமாக சிந்திப்பவர்களே வெற்றி பெறுகிறவர்கள் எதிர் காலத்தில் நிறைய சாதிப்பான் என நம்புகிறேன் . உங்கள் பெரிய மகனின் புகைப்படத்தில் தோன்றும் வானவில் போல அவனது கனவுகளும், ஆசைகளும் பலிக்கட்டும் . அந்த அழகான நிகழ்வை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள் . கவிதை ....

    ReplyDelete
  15. அருமை ப்ரியா.அத்தனை சுவாரஸ்யமாய் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பாய் இருந்தது உங்கள் நடை.இடையில் சிரிப்பதை தவிர்க்க முடியவில்லை.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.ஆமாம்,தற்போது உடல் நலம் சரியாகி விட்டதா?

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பர். க்ருஷ்ணப்ரியாவின் புதல்வன் கம்பர்-ஆக ஆசைப்பட்டதில் வியப்பென்னவோ?

    ReplyDelete
  18. மரா
    உங்கள் அன்புக்கு நன்றி.... உங்க கிட்டே நூறு ஐடியா இருக்கிற விஷயம் முன்னாடியே தெரியாம போச்சு... இனிமே நீங்க சொன்ன மாதிரி இது மாதிரி மட்டுமில்ல எது மாதிரி சீரியஸ் மேட்டருக்கும் உங்களுக்கே ஒரு போன் போட்டுடுறேன். ஆனா அதில ஒரு சிக்கல் என்னான்னா, உங்க போன் நம்பர் தெரியல. கொஞ்சம் தாங்களேன் ப்ளீஸ்...

    ReplyDelete
  19. சிவகுமாரன்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. குழந்தைகள் நமக்கு பல விஷயங்களில் ஊக்க மருந்தாய் இருக்கிறார்கள். அவர்கள் குறித்த சிந்தனைகள் எப்போதும் சந்தோசம் தருபவை தான் இல்லையா? உங்கள் "பாரதி"க்கு என் அன்பைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  20. கிருத்திகா


    உன் பாராட்டுக்கு நன்றி. உன் தம்பியல்லவா அதனால் தான் அவனுக்கு இத்தனை சுட்டித் தனமும்.....

    ReplyDelete
  21. பகத்சிங்


    உங்கள் பாராட்டுக்கு நன்றி அய்யா.. நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் அப்படி ஒரு நூலை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. போட்டோ ஆல்பம் மாதிரி இப்படி குழந்தைகளின் குறும்புகளை பதிந்து வைத்தால் அவர்கள் வளர்ந்து படிக்கையில் எத்தனை இனிமையாய் இருக்கும்? உங்கள் நண்பர் செய்தது, என்னை செய்யத் தூண்டுகிறது

    ReplyDelete
  22. @ பாரதிக்குமார்

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாரதி.... என் மகன் நிறைய சாதிப்பான் என்று வாழ்த்தியிருக்கிறீர்கள். மனதுக்கு மிகவும் நெகிழ்வாக உள்ளது .. உங்களைப் போல் அன்பு கொண்டவர்கள் வாழ்த்தும் போது அது நிச்சயம் பலிக்கும்...

    ReplyDelete
  23. @ பவித்ரா


    உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் நன்றி பவி. அதில் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதை மிகச் சரியாக உணர்ந்து என்னை பாராட்டியதற்கு நன்றி. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டது பவி. அதற்குப் பிறகு இன்னொரு முறை விழுந்து காலை உடைத்துக் கொண்டு அறுவை சிகிச்சை அது இது எல்லாம் நடந்து இப்போ சுகமாகவே இருக்கிறேன் . உங்கள் அன்பான விசாரிப்பு என்னை நெகிழ வைத்துவிட்டது..
    இந்த வார பெண்கள் மலரில் உங்கள் படைப்பு வருகிறதா?

    ReplyDelete
  24. @ கண்ணன்

    உன் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது கண்ணா.. ஒரே வாக்கியத்தால் என்னை ஓஹோவெனப் புகழ்ந்து விட்டாய்..... க க போ....

    ReplyDelete
  25. @ கண்ணன்



    சாரி........க க க போ.. காமெடிய புதுசா use பண்றேனா, அதான் ஒரு தடங்கல்.....

    ReplyDelete