Saturday, March 7, 2015

மகிழ்ச்சி மலரட்டும்......

நாளை சர்வதேச மகளிர் தினம்..... மகளிர் தினத்துக்கென்று தனியாய் பதிவு எழுதாவிட்டால் என்ன, இதோ ஒரு சந்தோஷக் கவிதை...... ஒரு நிகழ்ச்சிக்கென்று எழுதிய இந்த கவிதையை மகிழ்ச்சியான தருணங்களில் வாசிக்கத் தகுந்ததென்று நான் நினைக்கிறேன்... அதையே மகளிர் தின கவிதையாய் இங்கு பதிவேற்றுகிறேன்..........


அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்......





எது மகிழ்ச்சி
                    என பட்டியலிட்டால்
பல புது மகிழ்ச்சிகள்
                   புலப்படக்கூடும்
இதோ
என் மகிழ்ச்சிகள் சில........

இதிலே பலவும்,
உங்கள் மகிழ்ச்சிகளாகவும்
இருந்து விடக்கூடும்......

கேளுங்களேன்.....
நான்
நடந்து செல்லும் சாலையில்
நாலைந்து மரங்களாகவது
நிழல் தர நின்றால்
மகிழ்ச்சி.....


பல்லாங்குழியோ, பச்சைக்குதிரையோ
கல்லா மண்ணா, கால் விளையாட்டோ
யாராடக் கண்டாலும் 
மகிழ்ச்சி.....

Tuesday, December 16, 2014

படித்ததில் பிடித்தது



தவறு-மன்னிப்பு

சந்தோஷத்தை,
சஞ்சலத்தை,
சிலிர்ப்பை
என்று ஏதோ ஒன்றை தருவதாக...

முதல் தவறு மட்டும்
அச்சத்தையும்,
முதல் மன்னிப்பு கோரல்
வெட்கத்தையும் தருவதாக...

மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,
பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,

பிறகு எல்லாம்
பழகி விடுகிறது.

செய்வதற்கு எந்த தவறும்
கேட்பதற்கு எந்த மன்னிப்பும்
குற்ற உணர்வு தருவதில்லை...

அப்புறம் பார்த்துக்கலாம்
என்கிற மனநிலை இருக்கிற வரை
தவறுகள் தொடரும்...

கடவுளே எத்தனை
பெரிய தவறுக்கும்
பாவமன்னிப்பு தரும்போது...
மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?

மன்னிப்பு கேட்கிற
எத்தனை பேருக்கு -
பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்...

ஆனாலும்
தவறு செய்யாமல்
இருக்கப்போவதில்லை...
மன்னிப்பு கோராமலும்
இருக்கப்போவதில்லை...

எல்லாமே பாவனையாக,
மன்னிப்பு கேட்டு, கேட்டு...
மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -
மன்னிப்புக்கு மரியாதை
இல்லாமல் போனது...

மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல
தவறுகள் செய்கிறோமோ...

ஒரு நொடிப் பொழுதில்
விழும் அடி,
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை...

யாரோ ஒருவரின் தவறால் -
நான் பாதிக்கப்படும் போது,
தவறின் வீச்சு புரிகிறது...

மன்னிக்க முடியாத
இயலாமையும் பிடிபடுகிறது...

----------------------------------

(இது கண்ணதாசன் கவிதை என்ற குறிப்புடன், எழுத்து.காம் என்ற  தளத்தில் படித்தேன். கவிதையின் அழகு குறைவென்றாலும், கருத்து என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணதாசன் கவிதை தானா என்று ஒரு சந்தேகம் இருந்த போதிலும், கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.....)

Monday, December 15, 2014

நட்பு

நட்பென்னும் தொடர்பதிவுக்கு என்னை நிலாமகள் அழைத்து ஆயிற்று இரண்டு மாதங்கள்...... இப்படி ஒரு சோம்பேறி என்று தெரிந்திருந்தால் பாவம் நிலா என்னை அழைத்திருக்கவே மாட்டார்.... என்ன செய்வது எல்லாம் விதி..
சரி,  முயலாக இல்லாவிட்டாலும், ஆமையாகவாவது கொஞ்ச தூரம் ஓடிப் பார்த்து விடவேண்டும் என்று முடிவெடுத்து இந்த தொடர் பதிவில் நுழைகிறேன்....
இதில் கேள்வி பதில் எல்லாம் இல்லை.
படித்தபின் தோன்றும் கேள்விகளுக்கு அவரவர்களே பதில் எழுதிக் கொள்ளலாம்.....(எப்பூடி...)

எத்தனை வயதில் நான் நட்புக்குச் சொந்தக்காரியானேன் என்று நினைவில் இல்லை. ஆனால் முகமும், பெயரும் மறந்து போன பல நட்புகள் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டு தானிருக்கிறது.

Saturday, April 19, 2014

அன்பெனப்படுவது

என்னுடன் பணிபுரியும் பலரும் வேறு வசதியான இடங்களுக்கு மாறுதலில்

 செல்லும் போது மனம் கொஞ்சம் வருத்தப்படும்.( வேலை குறைவான இடம்

 தான் வசதியான இடம்) நாம் இன்னும் எத்தனை நாள் தான் இப்படி பரபரவென

 சுழல வேண்டியிருக்குமோ என்று சில சமயங்களில் மனம் நொந்து

போவதும், வேலை இல்லாமல் பலரும் துயரப்படுகையில் வேலை அதிகம்

 என்று அலட்டிக் கொள்வது டூ மச் என்று நானே என்னை சமாதானப்படுத்திக்

 கொள்வதும் அடிக்கடி நிகழ்வது தான்.

Friday, March 7, 2014

மகளிர் தின வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பெண்ணே....
உனக்கு
மகளிர் தின வாழ்த்துக்கள்
மகிழம் பூவாய் உன்
மனம் மணக்கட்டும்..

ஆயிரம் தொல்லைகள்
உன்னைச் சுற்றி வந்தாலும்
மத்தாப்பூவாய்
நீ மலர்ந்து சிரி.....
பிரச்சனைகள் உனைக் கண்டு
பிடரியில்  கால் பட பயந்து ஓடட்டும்....

யாருக்கு இல்லை கவலைகள்
சிரி
உன்னைச் சுற்றி
சந்தோஷ சாம்ராஜ்யம் உருவாக்கு.....

வாழ்வது ஒரு முறை தானே 
பெண்ணே
அகிலம் உன்னால் வாழட்டும்....

அன்பெனும் மந்திரம்
ஓதப் பழகு
அன்பெனும் அன்னம்
வாரி வழங்கு
அன்பெனும் உடைகள்
உடுக்கக் கொடு
அன்பால் உலகை
அணைத்துக் காட்டு....
அன்பே
நீ தானே பெண்ணே......

பொறாமை விடு
அகம்பாவம் அழி
அறிவைப் பெருக்கு
ஆற்றலை உயர்த்து....
அன்பை அழிப்போரை
அடித்தும் திருத்து....

கண்ணீர் விட்டு காலம்
களையாதே
சோம்பியிருந்து சோர்ந்து போகாதே
சட்டத்தின் துணையோடு
எங்கும்
சமாதானம் நிகழ்த்து

உன் பூங்கரங்களில் தான்
புவியே இருக்கிறது பெண்ணே,,,,,

பெண்கள் தின வாழ்த்துக்கள்
பெண்ணே உனக்கு ....!


நன்றி: பெண்ணாய்ப் பெற்று
        
              பெருமையுடன் வளர்த்த
       
              பெற்றோர் சங்கரன் / பார்வதிக்கு
            

Thursday, February 13, 2014

ஈன்ற பொழுதில்


விஜய் ரோஷன்





பாட்டும் பரதமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிறு வயது முதல் என் தீராத ஆசை....
பள்ளிப் பருவத்திலே நிறைய நடனங்கள் ஆடியிருக்கிறேன், என் நடனம் இன்றி பள்ளியில் ஒரு விழாவும் நடக்காது என்ற அளவுக்கு.! ஆனாலும், பரதம் மட்டும் ஆடியதே இல்லை. பரதம் ஆடுவது கொஞ்சம் பொருட்செலவுக்குரிய  செயல் என்பதால், அதற்கு வழியில்லாத என்னை  ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்ததே இல்லை. அது இன்னமும் ஒரு தீராத ஏக்கம் தான் மனதில்...

எப்படியும் அந்த பரதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி மனதில் இருந்ததன் விளைவு,

Sunday, February 9, 2014

கவிதா





  “வா கவிதா, பையனை அழச்சிட்டு வரலயா?”.. என்ற படி கதவைத்திறந்தாள்
 மேகலா.  
“இல்லண்ணி, அவர் வீட்ல இருக்கார், அதான் விட்டுட்டு வந்தேன்” என்ற
கவிதாவின் குரல் சுருதி இல்லாமல் இருந்தது. கையில் இருந்த  சின்ன 
கூடையை கதவருகில்  வைத்தாள்.

“என்னங்க, கவிதா வந்து இருக்கா பாருங்க” என்றபடி ரூமைப்பார்த்து குரல்
கொடுத்த மேகலா, “ஏன் கவிதா, வாட்டமாய் இருக்க? சரவணன் வேலைக்குப்
போறாரா? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

Friday, February 7, 2014

கள்ளியிலும் பூக்கள்



சப்பாத்திக் கள்ளி மலர் 

















எண்ண ஊற்றுகளில்
பீறிட்டு வழியும் காதலால்
நிரம்பித் ததும்புகிறது
உள்ளக் கோப்பை
ஆற்றுப் படுகைகளில்
ரசிப்பாரின்றி குலுங்கும்
முற்றாத தேக்கின் பூக்களென……!

புறக்கணிப்பின் வலியில்
சப்பாத்திக் கள்ளியின்
முட்களென உருமாறுகிறது  விழிகள்…..

பயந்து தடுமாறி
ததும்பி வழிந்தோடும் கோப்பையை
வெற்றிடமாக்கும் முயற்சியில்
காதலை வார்த்தைகளாய்க்
குழைத்து, குழைத்து
பிரபஞ்ச வெளியெங்கும் வீசுகிறேன்…….

வீசிய இடமெல்லாம்
காதலின் வித்துக்கள் முளைத்து
மணக்கத் தொடங்குகிறது  பிரபஞ்சம்…

பூத்திருக்கிறது
கள்ளியிலும் பூக்கள்.......




நன்றி: கல்கி வார இதழ்

Tuesday, January 14, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்......

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்....
 என் சோம்பேறித்தனத்தில் இருந்து
நான் வெளியே வரக் கூட ஒரு தை பிறக்க வேண்டியிருக்கிறது......

என்னதான் வேலைப்பளு, இணைய இணைப்பு சரியில்லை, உடல் நலமில்லை  என்றெல்லாம் காரணங்களைச் சொன்னாலும் கூட, எழுதாமல் இருப்பதற்கு சோம்பேறித் தனமும் ஒரு முக்கியமான காரணம் தான்..

  சில நாட்களுக்கு முன்னால் என் அன்புத் தோழி நிலாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் 20 வருடத்திற்கு முன்பு எழுதிக்கிழித்தவற்றைப்(!)  பகிர்ந்து கொண்டேன்......   உடனே பளிச்சென்று ஒரு மின்னல் ,,,,, என் மூளையில் இல்லை, நிலாவின் மூளையில்.... ( உனக்கு ஏது மூளை என்றெல்லாம் அறிவுப் பூர்வமான கேள்வி கேட்கக்கூடாது)

“ஏன் ப்ரியா, நீங்கள் அப்போது எழுதிய கவிதைகளை, ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களா, இல்லை என்றால் இனியாவது செய்யுங்கள். அப்படியே அவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவேற்றலாமே” என்று ஒரு அருமையான யோசனை   தந்தார்.....

அட, கேக்க நல்லாத் தான் இருக்கு,,,,, என்று நான் யோசித்துக் கொண்டே பல நாளைக் கடத்தி, ஒரு வழியாக, இன்று போகிப்பண்டிகையைக் கொண்டாட, என் சோம்பேறித்தனத்தை பெருக்கித் தள்ளி, அறிவைப் பளிச்சென்றாக்கி (வீட்டைத் துடைத்து பளிச்சென்றாக்குவதை விட இது எளிதாகத் தானிருக்கு)
இதோ ஒரு பழைய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்......

“பழையனக் கழிதலும், புதியன புகுதலும்” என்பதை சிறிது நேரம் மறந்து விட்டு, இதை படியுங்கள்.......

2014இல் சந்தோஷமாய் என்னை வலை வீச வைத்தமைக்காக
என் பிரிய சகி (அட!) நிலாமகளுக்கு அன்பு நன்றிகள்........


பொங்கல் வாழ்த்துக்கள்
-------------------------------------

பொங்கல் நாளின் வாழ்த்துக்கள்
எங்கும் நிறைந்து செழிக்கட்டும்
 மங்கள கீதம் திசை தோறும்
மனங்கள் மயங்க ஒலிக்கட்டும்....

உழவர் வாழ்வில் இனியேனும்
 உயர்வின்  தீபம் ஒளிரட்டும்
கழனிகள் கண்ட அவருள்ளம்
களிப்பும் கண்டு .வாழட்டும்..

பெண்டிரின் உலகம் புன்னகையை
பெருமைக் கொண்டு புனையட்டும்
பண்டிதர் இங்கே பலப் பலவாய்
பல்சுவை நூல்கள் பகரட்டும்

மேன்மை புவியில் நிரந்தரமாய்
நிமிர்ந்து நின்று சிரிக்கட்டும்
சீர்மை கொண்டு எல்லோரும்
சிறப்பாய் மகிழ்வுடன் வாழட்டும்..........

 அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்



நன்றி : 1989ம் வருட பொங்கல் சிறப்பிதழில் இந்த கவிதையை வெளியிட்ட "மங்கை" மாத இதழுக்கு........
I miss u "mangai".......

Monday, July 15, 2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம். 14/07/2013

இன்று இரவுடன் தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாம்....

 காலையில் தொலைக்காட்சியில் கேட்ட ( பார்த்த?)  செய்தி கொஞ்சம் வருத்தப்பட வைத்தது. பழையன கழிதலும், புதியன புகுதலும் எப்போதும் உள்ளது தான் என்றாலும், சில பழையன கழிகையில் வலிக்கத் தான் செய்கிறது....

இன்றைய தலைமுறைக்கு தந்தி என்பது அவ்வளவாக பரிச்சயப் படாத ஒரு விஷயம். கடிதமும்,தந்தியும் மட்டுமே தொடர்பு சாதனங்களாக இருந்த காலத்தில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தந்தி சேவை நிறுத்தம் ஒரு சின்ன வலியையாவது தரத் தான் செய்யும்..

சினிமாவில் , ’சார்,  தந்தி’என்ற குரலும், சீருடை அணிந்த ஒருவர் ஒரு காகிதத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு ஒரு மடித்த காகிதத்தை தந்து போவதும் காட்டுவார்கள். காகிதத்தை வாங்கியவர் அதனை பிரித்துப் படிப்பார்.ஆனால் நிஜத்தில் தந்தி பிரித்த ஒரு காகிதமாகவே வரும். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக்கொண்டு வரும் அந்த காகிதத்தை சீருடை அணிந்த பணியாளரும் வழங்கியதில்லை. தந்தி மேன் என்று ஒருவர் இருப்பார். அவரைப் பார்க்கும் போதே பயமாக இருக்கும்.

Saturday, April 27, 2013

வெற்றிக்குப் பெண்ணென்று பேர்


முற்றுப்  புள்ளிகளிலிருந்து  என்ற தலைப்பில் மார்ச் மாதம் வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் என் கட்டுரை....


வெற்றிக்குப் பெண்ணென்று பேர்


வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. போராட்டங்களை எதிர்கொள்ளுவதும், நமது பங்களிப்பைச் சிறப்பாய்த் தந்து போராடி வெற்றியை எட்டுவதும் தான் வாழ்வின் தினசரியாக இருக்கிறது. ஒவ்வொரு வினாடியுமே ஏதோ ஒரு விஷயத்துக்கான போராட்டம் தான். மரணம் சம்பவித்து விடாமல் இருக்க மறக்காமல் மூச்சு விட்டுக் கொண்டேயிருப்பது கூட போராட்டம் தானே..!
ஆண்களும் பெண்களும் நிறைந்த இந்த உலகில், சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும், சமாதானங்களும் எப்போதும் ஆண்களுக்கே வாரி வழங்கப்படுகிறது. பெண்கள் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறவர்களாக, கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கின்ற சந்தர்பங்கள் மறுக்கப்படுகிறவர்களாக, இழப்புகளுக்கு தங்களுக்குத் தாங்களே சமாதானம் கூறிக் கொள்கிறவர்களாக இருக்கும் நிலை தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
ஆனால் இப்படிப் பட்ட உலகிலும் பெண்கள் தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன், வாழ்த்தான் செய்கிறார்கள். நான் என்னைப் பற்றிச் சொல்லத்தான் இந்த கட்டுரையைத் தொட்ங்கினேன். யோசித்துப் பார்க்கையில் என்னைப் பற்றி பெருமையாய்ச் சொல்லி பக்கங்களை நிரப்பிச் செல்ல ஒன்றுமேயில்லை என்று தோன்றுகிறது. நாம் வாழ்க்கையில் சந்திக்கின்ற சிலர் நம்மை ஒன்றுமில்லாமல் அடித்து விடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணைப் பற்றி, அவளது நெஞ்சுறுதி பற்றி சொல்வதில்

Friday, January 11, 2013

நாயகன்.......

வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.... ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான் இருக்கிறது. நாம் தான் பல தருணங்களைத் தவற விடுகிறோம். 
தினமும் செல்லும் வழியில் நான் பல மனிதர்களைப் பார்க்கிறேன். பல குழந்தைகளைப் பார்க்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள்...எதிர்காலம் குறித்த கவலை இன்றி, ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாய் கழிக்கின்ற குழந்தைகளைக் கடந்து செல்கையில் நான் புதிதாய் பிறப்பதாய் உணர்கிறேன்.

Tuesday, November 13, 2012

இதுவும் சந்தோஷம் தான்.....


பண்டிகைக்குஇன்னும்ஒருசிலதினங்களேஇருந்தது.

துணிமணிகள்எடுத்தாயிற்று!

பலகாரங்கள்….. 

அதுபற்றிபேசித்தான்காலையில்அலுவலகம்

கிளம்பும்போது

எரிச்சலாகிவிட்டாள்மாலா.

Friday, November 2, 2012

அவன் பெரியவன்.....

விடாமல் மழை கொட்டிக் கொண்டிருந்தது.. இரண்டு நாள் மழையில் சாலைகள் கிட்டத்தட்ட சேதமாகிவிட்டிருந்தது... வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு கையில் குடையும், சேலையைத் தூக்கிப் பிடித்தக் கையில் சாப்பாட்டுக் கூடையும், தோள் பையுமாய் திணறித் திணறி வந்து வீட்டுக்குள் நுழைகையில் பிள்ளைகளுடன் அவரும் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தார்கள்.....

எனனைக் கண்டதும் சின்னவன் வேகமாக ஓடி வந்தான். ‘அம்மா, எங்களுக்கு நாளைக்கும் விடுமுறைன்னு சொல்லிட்டாங்களே... ஹையா... ஜாலி...” , பெரியவன் ஏற்கனவே விடுமுறையில் தான் இருந்தான். கும்மாளமாக இருந்தது அவர்களுக்கு....

சூடாக  ஏதாவது குடிக்க வேண்டும்

Friday, October 12, 2012

கண்ணா போற்றி! கிருஷ்ணா போற்றி!

எதையும் பகிர்ந்து கொள்ள எனக்கிருந்த இனியன் அவன்.... இருக்கிறான் என்று பல முறை எனக்கு நிரூபித்தவன்.... எனக்குத் துணையாய் எப்போதும் இருப்பவன்....
அலைகடலில் துரும்பாய் நான் அல்லாடிய தருணங்களில் என்னை கை தூக்கி  அவன் கரை சேர்த்திருக்கிறான். அவனிடம் மட்டுமே அழுதிருக்கிறேன், அவனிடம் மட்டுமே ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறேன், அவனை மட்டுமே நம்பியிருக்கிறேன்.

Monday, September 17, 2012

வேணும் வெள்ளை மாத்திரைகள்....

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் திரு இரா. எட்வின் அவர்கள் இந்தியாவின் மருத்துவர்கள் பற்றியும், மருந்துகள் விலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அரசு மருத்துவமனைகள் குறித்தும் ஒன்றிரண்டு வரிகள் அதில் வந்திருந்தன. பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம்  சிந்திக்கிறோம். மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூட, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தனியார் மயமாக்கப் படுவதை எதிர்த்துத் தான் பேசியிருந்தார் எட்வின்.  அவர் வசிக்கும் பெர்ம்பலூரில் உள்ள  அரசு மருத்துவமனைப் பற்றியோ, பணி புரியும் இடத்திலிருக்கும் அரசு மருத்துவமனைப் பற்றியோ சொல்ல ஒன்றுமில்லை அவருக்கு.  சரி அவர் அரசியல் அவருக்கு.

Monday, August 20, 2012

ஆனந்தம்......

உங்கள் காலத்தில்
அலைபேசிகள் இல்லையா....

திரைப்படங்களை
வானொலியில் கேட்டீர்களா...

பள்ளி வாகனம் இல்லாமல்
எப்படி பள்ளிக்குப் போனீர்கள்..

கணிணிகள் இல்லாத வாழ்வு
கசப்பாயில்லையா

விதவிதமாய்
கேள்விக்கணைகள் வீசும்
என்
குட்டிக்கவிதையை
அணைத்தபடி சொன்னேன்..

நாங்கள்
அப்போது தான் இருந்தோம்
ஆனந்தமாய்....

இயலாமை.....

கதவு சன்னலை
இறுக அடைத்து
திரைச்சீலைகளை
இழுத்துவிட்ட பின்பும்
உடை மாற்ற முடியவில்லை.....

சுவற்றில் இருந்து கொண்டு
சிரித்தபடி பார்க்கின்றனர்
சிவன் முருகன்
பெருமாள் பிள்ளையார்
இன்ன பிற ஆண்கள்.....

Thursday, April 19, 2012

நினைவுச் சாரல் குறித்து ஒரு பதிவுச் சாரல்




உலகின் ஆதியாக இருக்கிறாள் அம்மா. எந்த இனமானாலும் அம்மாவிலிருந்தே தொடங்குகிறது. கடல் நீரை உள்வாங்கி கருணை மழையாய் பொழியும் மேகம் போன்றவளா, எல்லா உயிரினமும் வாழ தன் மடி விரித்து மகிழ்ந்திருக்கும் பூமியைப் போன்றவளா? அம்மாவை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் ஏது? அம்மாவால் வளரும் எல்லா பிள்ளைகளும் வளர்ந்த பின் அம்மாவை நினைக்கிறார்கள். சிலர் மட்டுமே தமது செயல்களால் அம்மாவை உலகின் முன் நிலை நிறுத்துகிறார்கள்..மிகச் சிலரே ‘இப்படியொரு அம்மா நமக்கு வாய்க்கவில்லையேஎன்று ஒவ்வொருவரும் ஏங்கும் விதமாக மிகச் சிறப்பாக அம்மாவின் நினைவைப் பாடிப் பரவுகிறார்கள்.. சுகன் அம்மாவால் வளர்ந்தவர்., அம்மாவால் வாழ்கிறவர், அம்மாவால் நிலைத்திருக்கப் போகிறவர்.... ஒவ்வொரு வருடமும் அம்மாவின் நினைவு நாளை சடங்கு, சம்பிரதாயங்கள் என்னும் பாசாங்குகளில் மூழ்கிவிடாமல் இயல்பான இனிமையான இலக்கிய நிகழ்வாக்க் கொண்டாடும் சுகன் ஒரு முன்னுதாரணம்...
இந்த வருடம் 9.3.2012 அன்று மாலை எல்லா சுகன் நிகழ்வுகளையும் போலவே மிகச் சரியாக  6.30 மணிக்கு அம்மாவின் நினைவுச் சாரல் வீசத் தொடங்கிற்று....